லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா - ஒரு சிறப்புப் பார்வை


ஒம்புட்ஸ்மேன்:

ஒம்புட்ஸ்மேன் என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாத்தும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம். இந்த விசாரணை மன்றம் முதன்முதலில் 1809- ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் பல நாடுகள் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தன.இது ஒவ்வொரு நாட்டுக்கு வேறுபட்டு இருக்கும். இதனை முன்னோடிய கொண்டு லோக்பால் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது.

லோக்பால்:

'லோக்பால்' என்னும் சொல், லஷ்மி மால் சிங்வி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. 'லோக்' என்றால் மக்கள் என்றும் 'பால்' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமசுகிருதத்தில் அர்த்தமாகும். மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் 1986 ல் தன் 'Problems of Redressal of Citizen's Grievances' எனும் அறிக்கையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் சிறப்பு அதிகாரமிக்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

லோக்பால் மசோதா மக்களவையில் 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையின் 4 வது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது. பின்னர் 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. 43 வருடம் கழித்து மீண்டும் 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 2013 டிசம்பர் 17,18 ல் இரு அவைகளிலும் நிறைவேறியது.

லோக் ஆயுக்தா:

லோக் ஆயுக்தா ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும்.மாநில அளவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை கண்காணிக்க "லோக் ஆயுக்தா" எனும் விசாரணை மன்றத்தை அமைக்க வேண்டும் என்று ADMINISTRATIVE REFORMS COMMISSION (ARC) பரிந்துரைத்தது. லோக் ஆயுக்தா மசோதா ஏற்கப்பட்டு பல்வேறு இந்திய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் முதலில் மகாராஸ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்பட்டது.

லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா(1971), பீகார்(1973), ராஜஸ்தான்(1973), உத்திரபிரதேசம்(1975), மத்திய பிரதேசம்(1981), ஆந்திரா(1983), ஹிமாச்சல் பிரதேசம்(1983), கர்நாடகா(1985), அஸ்ஸாம்(1986), குஜராத்(1986), கேரளா(1988), பஞ்சாப்(1985), டெல்லி(1996), ஹரியான(1996) ஆகியவை உள்ளன. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும். விசாரணையில் ஏதேனும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கீழ்காணும் முறைகளில் தண்டிக்கப்படலாம். அதாவது அரசு அலுவலர்களின் அதிகாரத்தை குறைத்து பதவியிறக்கம் செய்தல், கட்டாய ஒய்வு அளித்தால், வேலையை விட்டு நீக்குதல், ஆண்டு சம்பள உயர்வு விகிதத்தை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை லோக் ஆயுக்தா நிறுவனம் அரசுக்கு அளிக்கும்.மாநில அரசானது இந்த பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது மாற்றலாம். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மாநில உயர்நீதி மன்றம் அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகலாம். இச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுவது முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது.

லோக் ஆயுக்தாவின் அதிகாரிகளை மாநில கவர்னர் நியமனம் செய்கிறார். மேலும் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பெற வேண்டும். லோக் ஆயுக்தாவின் நிர்வாகிகளாக பாராளுமன்ற உறுப்பினரையோ, சட்ட மன்ற உறுப்பினரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது.
லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்:

* மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு

* தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.

* லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.

* பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.

* லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.

* விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.

* ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.

* நேர்மை, நாணயம் மிக்க ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு

* லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.

* சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.

* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு

* லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.

* ஊழல் வழியில் சேர்த்த சொத்துக்களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறைகள் உள்ளடங்கும்.

* ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.

தொகுப்பு : திரு. வினோத் மாதையன்

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற