# கவிஞர் நா. காமராசன்

கருப்பு மலர்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் தன்னை புதுக்கவிஞனாக அறிமுகப்படுத்திக் கொண்டவர்

கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். 
உருவக அணியை உத்தியாக வைத்துக்கொண்டு உரைநடைக் கவிதை வடித்திடும் உயரிய கவிஞர்.

இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார்.


“கவியரசு” என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர். மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார். 

1942 ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகிலுள்ள பி.மீனாட்சிபுரம் என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.
பேராசிரியர் இலக்குவனார் தலைமையில் 1967ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர்.

கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், ”நீ கல்லூரியில் பணியாற்றியது போதும் உடனே புறப்பட்டு சென்னை வா' என்று சொல்லி தமிழக அரசின் மொழி பெயர்ப்புத்துறையில் அதிகாரியாக பொறுப்பேற்க வைத்தார்.

‘தாமரை', ‘கணையாழி', ‘கண்ணதாசன்', ‘கசடதபற' போன்ற இலக்கியப் பத்திரிகைகள் அனைத்திலும் அவருடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

கவிஞரின் முதல் கவிதைத் தொகுதியான ‘கறுப்பு மலர்கள்' தொகுதியை மதுரையில் நடந்த விழாவில் கலைஞர் வெளியிட்டார்.  சென்னையில் உள்ள கோகலே அரங்கில் நெடுஞ்செழியன் தலைமையில் ‘கறுப்பு மலர்கள்' பற்றிய திறனாய்வுக் கூட்டம் நடந்தது. 

சிறந்த இலக்கியப் படைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ விருதும் ‘கறுப்பு மலர்கள்' தொகுதிக்குக் கிடைத்தது.


முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ‘நீதிக்குத் தலை வணங்கு' படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து ”கனவுகளே ஆயிரம் கனவுகளே....' என்று தொடங்கும் பாடல் சூப்பர் ஹிட்டாகி கவிஞருக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து ‘ஊருக்கு உழைப்பவன்',  ‘பல்லாண்டு வாழ்க', ‘இதயக்கனி', ‘நவரத்தினம்' போன்ற பல எம்.ஜி.ஆர். படங்களில் பாடல்கள் எழுதினார்.

திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர். கவிஞரை அதிமுகவில் சேரும்படி அழைக்க, சற்று தயங்கினார். அப்போது எம்.ஜி.ஆர் “நீங்கள் கலைஞர் மீது அபிமானம் உள்ளவர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற படித்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வந்து பணியாற்றி கட்சியை வளர்க்க வேண்டும்.  உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வாருங்கள்” என்றார். இதையடுத்து கவிஞரும் அரசாங்க பணியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். சொன்னபடியே எம்.ஜி.ஆர். வீட்டு வாடகையிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
அரசாங்க பணியை ராஜிநாமா செய்த பிறகு ‘சோதனை' என்ற பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பொதுக்கூட்டங்கள் பேச வெளியூர் சென்ற காரணத்தால் பத்திரிகையில் முழு கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மூன்றாவது இதழுடன் பத்திரிகையை நிறுத்தும்படியாகிவிட்டது.

எம்.ஜி.ஆர். முதல்வரானதும் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய வெளிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி வந்தார். குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நிறைய வாய்ப்புக்களை வழங்கி வந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவும் நிறைய பாடல்கள் எழுத வாய்ப்புகளை அளித்தார். பொதுக்கூட்டம் பேச வெளியூர் சென்ற காரணத்தாலேயே பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பையும் இழந்திருக்கிறார்.

இளையராஜா இசையில் ‘நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் “சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என்ற பாடல் பிரபலமடைந்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் கமல் நடித்த ‘காக்கி சட்டை' படத்தில் “வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே” என்ற பாடல், ‘அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் இடம் பெற்ற “முத்துமணிச்சுடரே வா”, ‘வெள்ளை ரோஜா' படத்தில் இடம் பெற்ற “ஓ மானே மானே” போன்றவை கவிஞருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்த பாடல்களில் சில. ‘பாடும் வானம்பாடி' படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞரே எழுதியுள்ளார்.

இதுவரை சுமார் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான ‘வண்டிச்சோலை சின்ராசு' படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்குப் பிறகு சினிமாவுக்கு பாடல் எழுதவில்லை. தானாக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டு செல்லாத கவிஞர் பஞ்சவர்ணம் என்ற படத்துக்கு கதை வசனமும் எழுதியியுள்ளார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அதிமுகவில் பல்வேறு பதவியில் வகித்துள்ளார். 1990ல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளராக பதவி வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கையில் பல விருதுகளை பெற்றுள்ளார். 1991-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.
படைப்புகள்: 
கறுப்பு மலர்கள், கிறுக்கல்கள், நாவல்பழம், மகாகாவியம், சுதந்திரதினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சூரியகாந்தி, சகாரவைத் தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு, அந்த வேப்பமரம், காட்டுக்குறத்தி போன்ற முப்பத்து இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற