பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்-1

ஆரம்ப காலத்தில் ஆசிரியர் மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தை படித்தபொழுது இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா படத்தை பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு எழுத்தில் ஒரு வயலண்ட் இருந்தது போன்று அப்போது தோன்றியது. இதனாலே ஒரு சில வரிகளை அப்போது ஸ்கிப் செய்து வாசித்துள்ளேன்.

தற்போது மீண்டும் ஒரு முறை மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது சில விஷயங்களையும் உள்வாங்க முடிகிறது. அப்படி வாசித்த போது என்னை முதலில் கவர்ந்தவர் பால்பன் தான். [அவரைப் பற்றிய தகவல்களை ஆசிரியர் மதன் கூற்றிலிருந்தும், சமச்சீர்கல்வி & 11-வது புத்தகத்திலிருந்தும் தொகுத்து]
துருக்கிய இல்பாரி வம்சத்தை சேர்ந்த பால்பன் சிறு வயதிலேயே மங்காலியரிடம் அடிமையாக விற்கப்பட்டு, கடைசியாக இல்துமிஷ் சுல்தானிடம் (கி.பி 1211-1236) அவைக்கு கொண்டு வரப்படுகிறார். இந்த இடம் எனக்கு முக்கியமாகப்படுகிறது. [பால்பன் ஒரு அடிமையாக, தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக, வேட்டைக்காரனாக, தளபதியாக, இராஜதந்திரியாக, சுல்தானாக வாழ்ந்தவர் என்று ஆசிரியர் லேன்பூல் குறிப்பிடுவார்].

பால்பன் ஷார்ட்டாக, குறைந்த முக அம்சங்களை கொண்டவராக உள்ளார் என கருதி முகம் சுழிக்கிறார் சுல்தான் இல்துமிஷ். ஆனால் பால்பனின் கழிவிரக்கத்தோடு பார்க்கும் பார்வை இல்துமிஷ்சை மனம் நெகிழ வைக்கிறது. ஒரு அடிமையின் நீண்ட கால கஷ்டத்தை சொல்வது போல அந்த ஒற்றை பார்வை இருந்ததாக வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இறுதியில் பால்பனை தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக இல்துமிஷ் நியமிக்கிறார்.

எந்த வேலையாக இருந்தாலும் அதை திறம்பட செய்வது பால்பனின் குணாதசியம். இல்துமிஷ் மகள் ரஸியா (கி.பி 1236-1240) மற்றும் அவரது கணவர், துருக்கிய உயர்குடியினர் சதிதிட்டத்தால் நயவஞ்சகமாக கொல்லப்பட்ட பின்பு பஹ்ராம் & மசூத் என்ற இரு சுல்தான்க்கு பின் இல்துமிஷ் இளைய மகன் நசுருதீன் ஆட்சி பொறுப்பேற்கிறார். ஏற்கனவே வேட்டைக்காரனாகவும், ரஸியாவின் மெய்காப்பாலராகவும், தளபதியாகவும் பதவி விகத்த பால்பன் நசுருதீனிடம் பிரதம அமைச்சராகிறார்.
நசுருதீன் மிக மென்மையான மனம் கொண்டவர். சுல்தான்களிலே மற்ற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமல் ஒரே மனைவியுடன் வாழந்தவர். மதநூலை படியெடுத்து அதிலிருந்து தன் சொந்த செலவை மேற்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்தவர். இந்த வகையில் ஒளரங்கசிப்பிற்கு முன்னோடி என்றும் கூட சொல்லலாம். இப்படிப்பட்ட மென்மையானவரால் இருபது ஆண்டுகள் சுல்தானாக காலந்தள்ள முடிந்தது என்றால் பால்பனின் விசுவாசமான பிரதம அமைச்சக பணியால் மட்டுமே சாத்தியமானது.

நசுரூதின் இறந்த பின்பு அவருக்கு வாரிசு இல்லாததால் பால்பன் சுல்தானாக பதவி ஏற்க நேர்கிறது. ஏற்கனவே தனது மகளை சுல்தானுக்கு மணம் முடித்து வைத்திருந்தார் பால்பன். பால்பன் ஆட்சிக்கு வந்த போது நாடு கிட்டத்தட்ட ஒரு அவசரநிலை பிரகடனம் (Emergency Declared) செய்யப்பட்டதாக இருந்தது. அவருடையஅனுபவம்அவருக்கு கைக்கொடுத்தது.

முதலில் உயர் அழுத்தக் குழுவாக இருந்த நாற்பதின்மர் குழுவை (இல்துமிஷ் நியமித்த) ஒழித்தார்.அதில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட ஒரு சிலர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த பணிகளையெல்லாம் செவ்வனே செய்ய மிகத் திறமையான படை ஒன்று உருவாக்கப்பட்டது. தோலை உரித்து உப்புகண்டம் போட்டுருவேன் என்று விளையாட்டுக்கு ஒரு சிலர் சொல்வார்களே அதை பால்பன் உண்மையிலே நடைமுறையில் செய்துகாட்டினார்

மேலும் இஸ்ரேலின் மொஸாட் போன்ற ஒற்றர்படை ஒன்றை அப்பொழுதே பால்பன் உருவாக்கியிருந்தார்.  திவானி அர்ஸ் என்ற தனிப்படை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு போஜ்பூர், படியாலி, கம்பில், ஜலாலி போன்ற இடங்களில் பல புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பால்பன் ஒரு அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் சுல்தானாகும்பொழுது ஒரு முழு சுல்தானாகவே மாறியிருந்தார்.
சுல்தானின் அதிகாரத்தையும் மதிப்பையும் கூட்டுவதன் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என நம்பினார். எனவே தீவிரமான அரசவை நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். பைபோஸ் எனும் மண்டியிட்டு வணங்கி காலைத் தொட்டு முத்தமிடுதல் என்ற வழக்கத்தை பின்பற்றச் செய்தார். இதன் மூலம் அரசன் இறைவனது நிழல் போன்றவன் என்னும் எண்ணத்தை வலுப்படுத்தினார்.

இதன் மூலம் உயர்குடியினரை விட சுல்தான் உயர்ந்தவர் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டது. தனது செல்வத்தை வலிமையையும் உயர்குடியினருக்கும் மக்களுக்கு எடுத்துகாட்டும் விதத்தில் நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவை ஆடம்பரமாக கொண்டாடினார். "சட்டத்தின் முன் எல்லாரும் சமம்" என்பதே பால்பனின் கொள்கையாக இருந்தது. ஒரு முறை பதுவான் மாகாண ஆளுனர் மாலிக்பக்பக் என்பவர் மது மயக்கத்தில் அவரது பணியாளரை சவுக்கால் அடித்துக் கொன்று விட தகவல் பால்பனுக்கு போய் சேர்ந்தது.

கவர்னரை கைது செய்து தர்பாருக்கு இழுத்து வரச்செய்த சுல்தான் அவர் உடைகளை கழற்றி எறிந்து விட்டு சவுக்கால் அடிக்கச் சொல்லித் தண்டனை வழங்கினார். கொஞ்ச நேர விளாசலிலேயே கவர்னர் உயிர் பிரிந்தது. உடனடியாகத் தன் பின்னாலேயே மேலுலகம் வந்த முதலாளியைப் பார்த்த ஊழியர் வியந்து போயிருக்ககூடும்.

பால்பன் ஆட்சியில் (கி.பி 1265-1287) டெல்லி மாநகரம் கம்பீரமாக ஜொலித்தது என்பதில் சந்தேகமில்லை. அதில் நடுநாயகமாக அமர்ந்து பால்பன் நடத்திய தர்பார் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளையெல்லாம் பிரமிக்க வைத்தது. வெட்டிப் பேச்சு, ஜோக் அடிப்பது போன்ற விஷயங்களில் சுல்தானும் ஈடுபட்டதில்லை மற்றவர்களையும் அனுமதித்ததில்லை. அரசருக்குரிய கம்பீரத்தோடு முழு உடையில் தான் பால்பன் எப்போதும் காணப்பட்டார். [சிங்கம் பட சூர்யா போல]. நண்பர்கள் சுவாதீனமாக சுல்தானிடம் உரிமை எடுத்துக்கொள்வது உறவினர்கள் கூடி கும்மாளம் போடுவது போன்ற எதுவுமே அரமண்மனையில் நடந்ததில்லை.
ஆனால் தனது மகன் முகமது மீது மட்டும் அதிகம் பாசம் வைத்திருந்தார். முகமது ஒழுக்கமானராகவும் சிறந்த போர்வீரராகவும் திகழ்ந்தார்.1285-ல் வடக்கில் மங்கோலிய படையோடு மோத நேர்ந்த போது மங்கோலிய வீரர்கள் சிலர் மறைந்திருந்து நடத்திய உயிர் தாக்குதலில் முகமது உயிரழக்க நேர்ந்ததை கேள்விப்பட்ட பால்பன் நிலைகுழைந்தார். தான் உயிரையே வைத்திருந்த மகன் இறந்த செய்தியைகேட்ட பால்பன் பித்து பிடித்ததைப் போல பல நாட்கள் தொடர்ந்து கதறினார். ஒரு கட்டத்தில் பலவீனமாகி தன் மகனின் நினைவிலே அவரது (1287) உயிர்பிரிந்தது.

ஒரு முறை வங்காளத்தின் சுதந்திர மன்னராக செயல்ப்பட்ட துக்ரில்கானை தோற்கடித்து தனது இளைய மகன் புஹ்ராகானை வங்காள ஆட்சியாளராக பால்பன் நியமித்தார். “உன்னை வங்காள கவர்னராக நியமிக்கிறேன். உன் விளையாட்டு புத்தியை (மது, மாது போன்ற) கைவிட்டு கவனத்தோடு ஆட்சி புரிய வேண்டும். நான் சொல்வதை அலட்சியப்படுத்தினால் துஹ்ரில்கான் கதி தான் உனக்கும்” என எச்சரித்து விட்டு டெல்லி திரும்பினார் சுல்தான். அது தான் பால்பன்.

பி.கு : ஏற்கனவே துக்ரில்கான் தோற்று தப்பித்து ஒடும் போது பால்பனின் படையால் ஒருவர் துக்ரில்கான் தலையை கொய்து பால்பனின் காலடியில் சம்ர்பித்திருந்தார்.
தொகுத்து வழங்கியவர் : தம்பு சொக்கலிங்கம்

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற